திருச்சி துவரங்குறிச்சி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மணல் லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயமடைந்தனர்.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு திங்கள்கிழமை இரவு ஒரு தனியார் ஆம்னி பேருந்து 35 பயணிகளுடன் புறப்பட்டது. பேருந்தை மதுரை மாவட்டம், சுலைமான் தெற்கு தெரு பகுதியை சேர்ந்த ராஜா முகமது (45) என்பவர் ஓட்டினார். இவர் அருகில் மற்றொரு ஓட்டுநர் திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோடு மவுதம்பட்டியை சேர்ந்த பெருமாள் (44) என்பவர் அமர்ந்திருந்தனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை திருச்சி துவரங்குறிச்சி அருகேயுள்ள கல்லாமேடு என்ற இடத்தில் திருச்சி-மதுரை சாலையில் சென்று கொண்டிருந்த இந்தப் பேருந்து அங்கு டயர் வெடித்து சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மணல் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்து ஓட்டுநர்கள் ராஜா முகமது, பெருமாள் மற்றும் லாரி ஓட்டுநர் சிவகங்கை மாவட்டம், மதுரை முட்டம் பகுதியை சேர்ந்த கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தநர். இதில் லாரியின் ஓட்டுநர் டயரை கழற்றி மாட்டி கொண்டிருந்ததால் டயரின் அடியில் சிக்கி உயிரிழந்தார்.
பயணிகளின் அலறல் சப்தத்தை கேட்ட அப்பகுதியினர் சம்பவ இடத்துக்கு வந்து, இது குறித்து வளநாடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீஸார், இறந்து கிடந்த 3 பேரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலத்த காயத்துடன் இடிப்பாடுகளில் சிக்கியிருந்த சென்னை, அயனாவரத்தை சேர்ந்த தங்கராஜ் (49), சரண்யா (13), நெற்குன்றத்தை சேர்ந்த ஜெயந்தி (34), பாப்பா (64), வைசாலி (15), சஞ்சய் (14), தூத்துக்குடியை சேர்ந்த சார்லஸ் உள்பட 17 பேரை மீட்டு மணப்பாறை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைக்கும்,சிலர் தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்க விபத்துக்கு குறித்து வளநாடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இந்த சாலை விபத்தால் திருச்சி–மதுரை சாலையில் 2-மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மற்றொரு விபத்து: மணப்பாறை அருகேயுள்ள வையம்பட்டி, குப்பனம்பட்டியை சேர்ந்தவர் ராமநாயக்கர் (77). வையம்ட்டியில் உள்ள தனது பேத்தி வீட்டிற்கு செல்வதற்காக அங்குள்ள சாலையை கடக்க முயன்ற இவர் மீது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். இது குறித்து வையம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.