சிதம்பரத்தில் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மாணவியை கொடூரமான முறையில் தாக்கி நகைகள் பறிக்கப்பட்டது. காயமுற்ற மாணவி ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலம் அம்மாப்பேட்டை அருணாசலம்தெருவைச் சேர்ந்த டாக்டர் எஸ்.மணி என்பவரது மகள் எஸ்.எம்.சுருதி (19). இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மாணவியர் விடுதியில் தங்கி ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் பயின்று வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு மருத்துவக்கல்லூரி நூலகத்தில் படித்துவிட்டு விடுதிக்கு திரும்பியுள்ளார். அப்போது மர்மநபர்கள் பின்புறமாக வந்து உருட்டை கட்டையால் பின் மண்டையில் தாக்கி, அருகாமையில் உள்ள ஆவின்பால் பூத் அருகே இழுத்து சென்றுள்ளனர்.
பின்னர் மர்மநபர்கள் அவரது காதிலிருந்து கம்மல், தோடு, கவரிங் வளையல், சங்கிலி, ரிட்ஸ் வாட்ச் ஆகியவற்றை பறித்து கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. விடுதிக்கு மாணவி வராததால், சக மாணவியர்கள் இரவு முழுவதும் தேடி பார்த்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆவின்பால் பூத் பின்புறம் மயங்கிய நிலையில் கிடந்த மாணவி
சருதி திங்கள்கிழமை அதிகாலை நினைவுதிரும்பி எழுந்து வந்து நடக்க முடியாமல் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் அமர்ந்திருந்திருந்துள்ளார்.
இதனை பார்த்த முதுகலை மருத்துவர் ஒருவர் உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தார். அங்கு மாணவி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மாணவி தாக்கி நகைகள் பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து அவரது தந்தை மணி அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர்கள் போராட்டம்: மாணவி சுருதி கொடூரமான முறையில் தாக்கப்பட்டு நகைகள் பறிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் தங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி வளாகத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவப்புல முதல்வர் டாக்டர் பிரசாத்
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தகுந்த பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை மாணவர்கள் வாபஸ் பெற்றனர்.