மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து் பெய்த மழையால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி 153 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியது.
வடகிழக்குப் பருவ மழை நீடித்து வரும் நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இம்மாவட்டத்தில் கருப்பாநதி, கடனாநதி அணைகள் நிரம்பியுள்ளன. 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை ஓரிரு நாளில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திங்கள்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு: குண்டாறு அணையில் 4.1 மி.மீ, அடவிநயினார் அணையில் 70 மி.மீ, பாளையங்கோட்டையில் 9 மி.மீ, திருநெல்வேலியில் 1 மி.மீ, சிவகிரியில் 1 மி.மீ, செங்கோட்டையில் 6 மி.மீ மழையும் பதிவாகியிருந்தது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 3000 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 3.75 அடி உயர்ந்து 93.75 அடியாக இருந்தது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 110 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 2.60 அடி உயர்ந்து 70.60 அடியாகவும் இருந்தது.
மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1,744 கனஅடி நீர்வரத்து இருந்தது. மழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் மூடப்பட்டுள்ளன. 84 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணையின் நீர்மட்டம் 82.50 அடியாக இருந்தது. அணை முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டது. அணையின் நீர்வரத்து 138.25 அடியாக குறைந்தது.
ராமநதி அணையின் நீர்மட்டம் 80.75 அடியாகவும் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 98 கனஅடி நீர்வரத்து இருந்தது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 71.52 அடியாக இருந்தது. அணைக்கு வந்து கொண்டிருந்த 320 கனஅடி உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 4.75 அடி உயர்ந்து 114.75 அடியாகவும், வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 30 அடியாகவும் இருந்தது.
வடக்குப் பச்சையாறு அணைக்கு விநாடிக்கு 331 கனஅடி நீர்வரத்து இருந்தது. நம்பியாறு அணையின் நீர்மட்டம் 15.75 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 36 அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 94 கனஅடி நீர்வரத்து இருந்தது.
தொடர்ந்து வெள்ளம்: மணிமுத்தாறு அருவியில் 2 ஆவது நாளாக திங்கள்கிழமை வெள்ளம் இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இருந்து நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை. பருவ மழை நீடித்து வரும் நிலையில் திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதை அடுத்து தாமிரவருணி பாசனத்தில் பிசான பருவ சாகுபடிகள் தீவிரமடைந்துள்ளன.
கடனாநதி திறப்பு? பிசான சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடனாநதி, ராமநதி அணைகளின் மூலம் பாசனம் பெற்று வரும் சுமார் 18 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.