வழிகாட்டி மதிப்பில் காணப்படும் குளறுபடி காரணமாக தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பத்திரப்பதிவுத்துறையில் ரூ. 30 ஆயிரம் கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பதிவுத்துறை அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 578 சார் பதிவாளர் அலுவலகங்களும், 50 மாவட்ட பதிவாளர் அலுவலகங்களும் இயங்கி வருகிறது. பதிவுத்துறையில் பிறப்பு, இறப்பு வரை பொதுமக்களுக்கான சேவை அளிக்கப்படுகிறது. சொத்து பரிவர்த்தனை, சங்கங்கள் பதிவு, சிட்பண்ட் நிறுவனம், திருமணம் பதிவு போன்றவை இத்துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
சொத்துக்கள் மீதான வழிகாட்டி மதிப்பு கடந்த 2012 இல் உயர்த்தப்பட்டது. பல மடங்கு வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டதால் பத்திரங்கள் பதிவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பதிவுத்துறையில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பதிவுத்துறை அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அடிப்படை பணியாளர்கள் முதல் பதிவுத்துறை துணைத் தலைவர் வரையில் உள்ள பெரும்பாலான பணியிடங்கள் காலியாக உள்ளன. 150 ஆவது ஆண்டினை இத்துறை பூர்த்தி செய்துள்ள போதிலும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக பதிவுத்துறை பணியாளர்கள் பணிச்சுமையில் திணறுகின்றனர்.
வழிகாட்டி மதிப்பு பல மடங்கு உயர்த்தப்பட்டதால், பத்திரம் பதிவு பெருமளவு குறைந்துள்ளது. இதனால் 16 சதவீதம் மட்டுமே கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. மேலும் கணினி ரசீது வழங்குவதில் அட்டவணை செய்வதில் தவறுகள் நிகழ்ந்திருப்பதாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பதிவுத்துறை அலுவலர் சங்கம் அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில் கடந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசுக்கு ரூ. 30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்தும், இந்த இழப்பை சரி செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு மாதமும் பதிவுத்துறையில் தன்னிச்சையாக குறிப்பிட்ட சர்வே எண்களில் உள்ள சொத்துக்களின் வழிகாட்டி மதிப்பு பல மடங்கு உயர்த்தப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் அரசுக்கு வருவாய் ஈட்டுவதில் 3 ஆவது துறையாக திகழ்ந்து வரும் பதிவுத்துறையில் காணப்படும் குளறுபடியால் வருவாய் சரிந்து வருகிறது என்பது உண்மை. எனவே அரசு பதிவுத்துறையில் வழிகாட்டி மதிப்பில் காணப்படும் குளறுபடியினை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.