இதனால் 16.9.13-ம் தேதியிலிருந்து கல்லூரி செல்வதிலிருந்து விலகிக் கொண்டுள்ளார். கல்லூரி படிப்பை நிறுத்துவது தொடர்பாக 10.9.13-ம் தேதி கல்லூரிக்கு தகவல் கொடுத்துள்ளார். செப்டம்பர் 5 முதல் 15-ம் தேதி வரை அவர் படித்துள்ள 10 நாட்களில் 5 நாட்கள் கல்லூரிக்கு விடுமுறையாகும். 5 நாட்கள் மட்டுமே கல்லூரி வகுப்பில் படித்துள்ளார்.
விக்னேஷ்வரன் 16.9.13-ம் தேதி கல்லூரியில் மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) கேட்டு மனு கொடுத்துள்ளார். 7.10.13-ம் தேதி கல்லூரிக்கு வந்து அவருடை சான்றிதழைத் திரும்பக் கேட்டபோது, அடுத்த வருடத்திற்குரிய கட்டணத்தையும் செலுத்தினால்தான் சான்றிதழ் தரப்படும் என்று கூறினார்களாம்.
இதனையடுத்து விக்னேஷ்வரன் தான் உறுப்பினராக உள்ள நுகர்வோர் அமைப்பின் உதவியை நாடியுள்ளார். இதுபோன்ற புகார்களில் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் வழங்கிய தீர்ப்புகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்புகளின் நகல்களை இணைத்து நுகர்வோர் அமைப்பு கல்லூரிக்கு தபால் எழுதியுள்ளது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் கல்லூரி நிர்வாகம் விக்னேஷ்வரனின் ஒரிஜினல் சான்றிதழ்கள் மற்றும் ரூ.29170-க்கான காசோலையை இணைத்து அனுப்பியுள்ளார்கள். ஆனால் காசோலையை விக்னேஷ்வரன் தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் 1.11.13-ம் தேதி கல்லூரி வழங்கிய காசோலையை அவர்களுக்கே ஒரு கடிதம் மூலம் திருப்பி அனுப்பிவிட்டார்களாம்.
இதனையடுத்து விக்னேஷ்வரன், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், தான் கல்லூரி சென்ற 5 நாட்களுக்கான கட்டணத்தை யுஜிஜூ மற்றும் எம்.எச்.ஆர்.டி. வழிகாட்டுதல்படி ரூ.1000 மட்டும் கழித்துக் கொண்டு மீதி பணத்தை கல்லூரி நிர்வாகம் தர வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தார்.
மனுவை நீதிபதி வ.பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் ச.சங்கர், ச.கற்பகச்செல்வி ஆகியோர் விசாரித்தனர்.
அவர்கள் வழங்கிய தீர்ப்பு விவரம்: கல்லூரி நிர்வாகம் மாணவர்க்கு ரூ.29170 மட்டுமே கொடுக்க முன் வந்தது சட்ட விரோதமானது. கல்லூரியின் சேவையில் சேவைக் குறைபாடு உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணைய உத்தரவைப் பின்பற்றி, இந்த வழக்கிலும் உத்தரவு பிறப்பிக்கலாம் என்று நீதிமன்றம் கருதுகிறது.
கல்லூரி நிர்வாகம் மாணவருக்கு ரூ.93,815-ஐ இந்த வழக்கு தாக்கல் செய்த 1.8.2014-ம் தேதியிலிருந்து 6 சதவீத வட்டியுடன் உத்தரவு பிறப்பித்த இரு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். அதற்குள் செலுத்த தவறினால் ரூ.93,815-ஐ மனு தாக்கல் செய்த தேதியிலிருந்து வசூலாகும் தேதி வரை 10 சதவீத வட்டியுடன் திரும்பத் தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் மாணவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவிற்காக ரூ.5 ஆயிரமும் சேர்த்து வழங்கவும் உத்தரவிடப்பட்டது.