ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

100 சதவீத தேர்ச்சி: அரசுப் பள்ளியிலிருந்து மாணவர்கள் நீக்கப்பட்ட பிரச்னை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து 100 சதவீதம் தேர்ச்சி காட்ட வேண்டும் என்பதற்காக பள்ளியிலிருந்து முறைகேடாக நீக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவர்கள் அரசுப் பொதுத் தேர்வு எழுதவும், தொடர்ந்து இதே பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 பிப்ரவரி 2016, 2:20 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து 100 சதவீதம் தேர்ச்சி காட்ட வேண்டும் என்பதற்காக பள்ளியிலிருந்து முறைகேடாக நீக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவர்கள் அரசுப் பொதுத் தேர்வு எழுதவும், தொடர்ந்து இதே பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 13 மாணவ மாணவியருக்கு முறைகேடாக மாற்றுச் சான்றிதழை வழங்கிய பள்ளியின் தலைமை ஆசிரியை உமாதேவி மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பரிந்துரை செய்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள எஸ்.அம்மாபட்டி, அரசு மேல் நிலைப்பள்ளியில் 100 சதவீத தேர்ச்சிக்காக 10ஆம் வகுப்பு மாணவர்கள் உள்ளிட்ட 13 பேர் பள்ளியிலிருந்து முறைகேடாக நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட மாணவர்களில் சி.முனீஸ்வரன், கண்ணன் இருவரும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனர்.

இதனையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் முனியசாமி ஆகியோர் பள்ளியில் ஆய்வு செய்தனர். அதில் 13 மாணவ மாணவியருக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் முதன்மைக் கல்வி அலுவலரிடம் கூறியதாவது:

கடந்த சில நாள்களுக்கு முன்பு, பள்ளித் தலைமை ஆசிரியர் உமாதேவி, எங்களை அழைத்து, ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் தேர்ச்சி பெறுவது கடினம். கடந்த நான்கு ஆண்டுகளாக எங்களது பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. அதனால்,  மாற்று சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறி முன்தேதியிட்டு மாற்றுச் சான்றிதழை வழங்கினார் என்றனர். எங்களது பிள்ளைகள் தொடர்ந்து இங்கேயே படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதனையடுத்து முதன்மைக் கல்வி அலுவலர் சி.முனீஸ்வரன், கண்ணன் ஆகிய இரு மாணவர்களும் உடனடியாக பள்ளியில் தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுத்தார். மேலும் பல்வேறு இடங்களில் வேலைக்குச் சென்றுள்ள மற்றும் வீட்டில் உள்ள பாதிக்கப்பட்ட மாணவ மாணவியரும் தொடர்ந்து இதே பள்ளியில் சேர்ந்து படிக்க நடவடிக்கை எடுத்தார்.

தலைமை ஆசிரியை உமாதேவி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வி இயக்குநருக்கு பரிந்துரைக்ப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் எந்தவித பிரச்னையும் இன்றி தொடர்ந்து இதே பள்ளியில் தங்களது படிப்பைத் தொடரலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.