

தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் கன்னையா குமாரின் ஜாமீன் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவுக்கு எதிராக முழக்கமிட்டதாகக் கூறி, மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கன்னையா குமார் இரு முறை ஆஜர்படுத்தப்பட்ட போது, அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கன்னையா குமார், அவரது வழக்கறிஞர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டனர்.
இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வலியுறுத்தி கன்னையா குமார் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜாமீன் மனுவை தில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். மேலும், கன்னையா குமார் மற்றும் அவரது வழக்கறிஞருக்கு உரிய பாதுகாப்பு வழக்கு தில்லி போலீஸார் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.
தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தின் நிலைமை ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. பாட்டியாலா நீதிமன்றத்துக்கு பதில் கன்னையா குமார் தில்லி உயர் நீதிமன்றத்தை அணுகலாம். ஜாமீன் மனுவை நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்ட நீதிபதிகள், தில்லி உயர் நீதிமன்றம் கன்னையா குமார் ஜாமீன் மனுவை விரைவாக விசாரித்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றனர்.
மேலும், நீதிமன்றத்தில் ஆஜாராகும் அனைத்து மனுதாரர்களின் வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பும் அளிக்க வேண்டும். பத்திரிக்கையாளர்களை அனுமதிப்பத்து குறித்து நீதிமன்ற பதிவாளர் நடவடிக்கை எடுக்கலாம் என குறிப்பிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.