புதுச்சேரி,
பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி உள்பட பல்வேறு தலைவர்கள் வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது கட்டுரை வலைபதிவில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடியின் ஓரே அறிவிப்பால் பயங்கரவாத நிதியுதவி, கள்ள நோட்டு புழக்கம், ஊழல், அரசியல் முறைகேடுகள், திட்டமிட்ட குற்றங்கள் போன்றவை ஒழிக்கப்பட்டுள்ளன. மோடி என்ற ஓருவரால் 130 கோடி மக்களின் வாழ்க்கை நிலை மாறுகிறது. பிரதமர் மோடிக்கு தாய்நாடான இந்தியா தான் முக்கியம் என்பது அவரது அறிவிப்பில் வெளிப்படுகிறது என பாராட்டியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் விஸ்வநாதன்:
பிரதமர் மோடியின் அறிவிப்பால் கருப்பு பணம், கள்ள ரூபாய் நோட்டு எதுவும் வெளிவரப்போவதில்லை. வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதில் தோல்வியை மறைக்க புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுவர். புதுச்சேரியில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
பாஜக தலைவர் ஆர்வி.சாமிநாதன்:
பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஏழை, எளிய மக்களின் அரசு என்பதை நிருபித்துள்ளது. அரசியல்வாதிகள் தொடர்ந்து கருப்பு பணத்தை சேர்த்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருந்தனர்.
மோடியின் அறிவிப்பால் கருப்பு பணம் வைத்துள்ளோர் தான் அச்சப்பட வேண்டும். ஏழை, எளிய மக்கள் கவலைப்படத் தேவையில்லை. மக்களிடம் சுரண்டப்பட்ட கணக்கில் வராத பணம் இதன் மூலம் அழிக்கப்படும். இதனால் இந்தியா வல்லரசாக மாறுவது உறுதி. பிரதமரின் நடவடிக்கைக்கு புதுவை பாஜக நன்றியை தெரிவிக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள்:
மோடியின் அறிவிப்பால் ஏழை, நடுத்தர மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். ரூ.50, 100 நோட்டுகள் கிடைக்கவில்லை. இதற்கு ஏதாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்திருக்கலாம். புதுச்சேரி வர்த்தக சபைத் தலைவர் செண்பகராஜன்:
பிரதமர் மோடியின் அறிவிப்பால் கருப்பு பணம், கள்ள ரூபாய் நோட்டுக்கள் ஒழியுமா என பின்னர் தான் தெரியும். புதுச்சேரியில் இதனால் வர்த்தகம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு சரியான சேவை கூட செய்ய முடியவில்லை. புதுச்சேரியில் வர்த்தகம், வியாபாரம் சில நாள்களுக்கு சரிந்து தான் இருக்கும். பணப்பரிவர்த்தனையும் இல்லாததால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனறார்.