தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடைபெற்றால், கடந்த முறை போன்று கடுமையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்கும் என்றார் இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, ஆய்வு செய்வதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திங்கள்கிழமை திருச்சி வந்த அவர், விமான நிலையத்தில் அளித்த பேட்டி:
நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசியல் கட்சியினருடன ஆலோசனை நடத்துவதற்காக வந்துள்ளேன்.
பணப்பட்டுவாடா செய்வதற்காக அரசு நிர்வாகம் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு.,மூன்று தொகுதிகளிலும் தேர்தல் முறைப்படி நடக்க உரிய நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. குற்றச்சாட்டு உறுதியாகும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் துணை ராணுவப் படையை ஈடுபடுத்தியுபள்ளது. மேலும் கண்காணிப்பும் தீவிரப்படுóத்தப்படும்.
த்ஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதற்காக கூடுதலாக மத்திய அரசு துறை அதிகாரிகளையும் பாதுகாப்புப் பணிக்கு துணை ராணுவப் படையினரையும் பணியில் ஈடுபடுத்த உள்ளோம்.
3 தொகுதிகளில் பணப்பட்டுவாடா குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு இதுவரை எவ்வித புகாரும் வரவில்லை. ஆலோசனை நடத்திய பின்னர் பணப்பட்டுவாடா குறித்து ஏதேனும் புகார்கள் வந்தால், கடந்த முறை போன்று கடுமையான நடவடிக்கைகள தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என்றார் சின்ஹா.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் திலிப் சர்மா, ஜித்தேந்திர ஓஜா ஆகியோரும் உடன் வந்தனர்.
முன்னதாக, துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பூங்கொத்து அளித்து வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.