புதுதில்லி: தில்லி, ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மண் சோறு சாப்பிட்டனர்.
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற தேமுதிக.,வை சேர்ந்த பிரேமலதா விஜயகாந்த், விவசாயிகளுடன் சேர்ந்து அவரும் மண் சோறு சாப்பிட்டார். பின்னர் பேசிய அவர் அணைகள் வறண்டு காணப்படுகின்றன.
அவற்றை தூர் வார வேண்டிய சரியான தருனம் இது தான். தேசிய நெடுஞ்சாலைகளைப்போல் தேசிய நதிகளையும் இணைக்க வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து நிர்வாகம் சரியில்லாமல் போனதால் விவசாயிகள் நலிவடைந்துள்ளனர்.
விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க வேண்டும். விவசாயிகளின் நிர்வாணப் போராட்டம் தமிழகத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவு. தில்லியில் போராடும் விவசாயிகளை தமிழக முதல்வர் இதுவரை சந்திக்கவில்லை. விவசாயிகளின் பிரச்னை தீர்ப்பதில் மத்திய அரசுக்கு மட்டுமல்ல, மாநில அரசுக்கும் பெரும் பங்கு உள்ளது என்று கூறினார்.