தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைமாணவர்களுடன் சேர்ந்து தடுக்க முடிவு: வைகோ திருச்சியில் பேட்டி

News image
Updated On :20 பிப்ரவரி 2017, 11:37 am

ஆர். எஸ். கார்த்திகேயன்

திருச்சி: மத்திய அரசு அனுமதியளித்துள்ள மீத்தேன் திட்டத்தை விட ஆபத்தான ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்களுடன் சேர்ந்து போராடவுள்ளேன் என திருச்சியில் மதிமுக நிறுவனர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:

தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கடந்த இரண்டரை ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்து வாதாடி வருகிறேன். அந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதியரசர்கள் செல்வம் மற்றும் கலையரசன் ஆகியோர் தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத புகழ் பெறும் வகையில் உத்தரவிட்டுள்ளனர்.

அதாவது கருவேல மரங்களை வேருடன் அகற்ற மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டதுடன் அதனை மாவட்ட நீதிபதிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளவும் உத்ரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

கருவேல மரங்களை அகற்ற மாணவர்கள், பொதுமக்கள், பணியாளர்கள் அனைவரும் முன்வர வேண்டும். ஜேசிபி இயந்திரம் மூலம் வேருடன் அகற்ற வேண்டியுள்ளதால் செல்வந்தர்கள் அதற்கு நிதி உதவியும் செய்ய வேண்டும். ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை பார்வையிட சென்றுகொண்டுள்ளேன்.

ஆனால் அதைவிட தற்போது மிக முக்கியமான ஆபத்து தமிழகத்தை நோக்கி ஏவிவிடப்பட்டுள்ளது. அதாவது மீத்தேன் திட்டத்தை விட மிக மோசமானதும் கொடியதுமான வேறு வடிவத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

மிகவும் நச்சுத்தன்மைகொண்டது. தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவணம் அருகே நெடுவாசல் என்ற கிராமத்தில் மேற்கொள்ளவுள்ள அந்த திட்டத்தை எதிர்த்து போராட, அந்த பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர் என்னை தொடர்புகொண்டு தெரிவித்தனர்.

சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீரை காப்பது நமது சந்ததியைக் காப்பது போன்றது. ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீரை பாதிக்கும் மோசமான திட்டம். எனவே மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து இந்த ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு தடை விதிக்க போராட முடிவு செய்துள்ளேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.