கத்தார் மற்றும் சவூதி அரேபியா, பஹ்ரைன் இடையிலான பிரச்சனையில் குவைத் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தருவதாக கூறி 5 நாடுகள் கத்தார் உடனான உறவை துண்டித்துள்ளன. 5 நாடுகளின் துண்டிப்பால் கத்தாரில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த விவகாரத்தில் குவைத் தலையிட்டு சமரசம் செய்ய முயன்றுள்ளது.
இதுகுறித்து குவைத் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது: - குவைத் மன்னர் ஷேக் சபா அல்-அகமது அல் சபா, தொலைபேசியில் தொடர்பு கொண்டு கத்தார் நாட்டு தலைமை அதிகாரியுடன் பேசியதாகவும் அப்போது நிலைமையை இன்னும் மோசமாக்க கூடிய நடவடிக்கைகளை கத்தார் எடுக்காமல் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு மதிப்பளித்து கத்தார் மக்களுடன் நெருக்கடி நிலை குறித்து பேச இருந்த அந்நாட்டு ஆட்சியாளர் அல் தானியின் பேச்சு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவும் குவைத் வெளியுறவு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து மற்றும் பஹ்ரைன் கத்தார் உடனான உறவை துண்டித்துப்பதாக நேற்று அறிவித்திருந்தன, இதையடுத்து லிபியா மற்றும் மாலத்தீவு கத்தார் உடனான தூதரக உறவை துண்டிக்க முடிவு செய்து அறிவித்துள்ளது.