புது தில்லி: அடுத்த 2024-ஆம் ஆண்டு வரை நரேந்திர மோடியே பிரதமர் பதவியில் நீடிப்பார் என்று மத்திய அமைச்சரும், மக்கள் ஜனசக்தி கட்சித் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் நம்பிக்கை தெரிவித்தார்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர் நிதீஷ் குமார், சமாஜவாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் எப்போதும் ஒன்றுசேர முடியாது.
பிரதமர் பதவி வேட்பாளர்ளைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு அவர்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
பிரதமர் பதவி தற்போது காலியாக இல்லை. தற்போது பிரதமராக மிகச் சிறப்பாக பதவி வகித்துவரும் மோடியே அடுத்த 2024-ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடிப்பார்.
தலித்துகளின் நலனுக்காக பிரதமர் மோடி மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்றார் பாஸ்வான்.