புதுதில்லி: கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பிரார்த்திக்கிறேன் என்று ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த 8-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளது. மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளன. வயநாடு, இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், ஆலப்புழை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்து வருவதால் கேரள மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது. மீட்புப் பணியில் ராணுவம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, மழை மற்றும் நிலச்சரிவால் கடந்த சில தினங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் வீடுகள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் பல பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதிலும் 439 முகாம்களில் 53,401 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிப்பட்ட கேரள மக்களுக்காகப் பிரார்த்திக்கிறேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது கேரளாவில் பெய்துவரும் கனமழை பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். கேரளாவில் உள்ள காங்கிரஸாரும் அண்டை மாநில பகுதிகளில் உள்ளவர்களும் தங்களால் முடிந்த உதவியை தேவைப்படும் கேரள மக்களுக்கு உதவ வேண்டும். கேரள மக்கள் இந்தக் கடினமான நேரத்தில் இருந்து விரைவில் மீண்டுவர இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.