வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த கேரள மக்களுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கேரள மக்களுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் நிதியுதவி அறிவித்துள்ளார். 
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த கேரள மக்களுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
Updated on
1 min read


திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கேரள மக்களுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் நிதியுதவி அறிவித்துள்ளார். 

கேரள மாநிலத்தில் கடந்த 8-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளது. மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளன. வயநாடு, இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், ஆலப்புழை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இடுக்கி அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டியதை அடுத்து 26 ஆண்டுகளுக்குப் பின்னர் திறந்து விடப்பட்டுள்ளது. 

தென்மேற்கு பருவமழை மிகத் தீவிரமாக பெய்து வருவதால் கேரள மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது. மீட்புப் பணியில் ராணுவம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. மீட்புப் பணியில் 32 ராணுவ விமானங்கள், 5 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, மழை மற்றும் நிலச்சரிவால் கடந்த சில தினங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது.

பல்வேறு பகுதிகளில் வீடுகள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் பல பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதிலும் 439 முகாம்களில் 53,401 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம், மலப்புரம், கோழிக்கோடு மற்றும் பாலக்காடு பகுதிகளுக்கு வரும் 13-ஆம் தேதி வரை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வெள்ளப்பாதிப்பை பார்வையிடுவதற்காக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை கேரளா வரவுள்ளார். வெள்ள நிலவரங்களை முதல்வர் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி, கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பினராயி விஜயனிடம் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு நடத்தினர். 

இதையடுத்து வயநாடு மாவட்டத்தில் நடந்த மீளாய்வு கூட்டத்திற்கு பின்னர், வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும், வெள்ளத்தால் வீடு, நிலம் இழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், முகாம்களில் வாழும் அனைத்து குடும்பங்களும் ரூ.3,800 நிவாரண உதவியாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com