

புது தில்லி: கேரள வெள்ள நிவாரண நிதிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவி அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு நாடு முழுவதும் இருந்து நிதியுதவியும், பிற உதவிகளும் தொடர்ந்து குவிந்து வருகின்றன.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தனது ஒரு மாத ஊதியம் ரூ.4 லட்சம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதேபோன்று மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மாநிலங்களவையின் மூத்த அதிகாரிகள் ஆகியோர், தங்களது ஒரு மாத ஊதியத்தை கேரளத்துக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.
இதேபோல், அனைத்து எம்.பி.க்களும் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று வெங்கய்ய நாயுடுவும், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனிடையே, அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் ரூ.1 கோடியும், அவருடைய மகனான மூத்த வக்கீல் கிருஷ்ணன் ரூ.15 லட்சமும் அளிப்பதாக அறிவித்தனர்.
இந்நிலையில், நேற்று திங்கள்கிழமை ஒரு பொதுநல மனு மீதான விசாரணையின்போது, மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா, உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் கேரளத்துக்கு நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளனர் என்ற தகவலை தெரிவித்தார்.
இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலா ரூ.25 ஆயிரம் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் கேரளாவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப், கேரளாவுக்கு நிவாரண பொருட்களை திரட்டி அனுப்புவதில் வழக்குரைஞர்களுடன் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
கேரளாவில் 100 ஆண்டுகளில் வரலாறு காணாத வெள்ள பாதிப்பால் இதுவரை 357 உயிரிழந்துள்ளனர் என்றும் ரூ.19,512 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.