

லக்னோ: கங்கை நதியை தூய்மைப்படுத்த ரூ.21 ஆயிரம் கோடியில் 200க்கும் அதிகமான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
உத்தரபிரததேசத்தில் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் அதி விரைவு சாலை திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 340 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் இந்த அதி விரைவுசாலை நொய்டா போன்ற மாநிலத்தில் உள்ள பல முக்கிய நகரங்களுக்கும், பரபங்கி, அமேதி, சுல்தான்பூர் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை தலைநகர் லக்னோவுடன் இணைக்கும் விதத்தில் அமைக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், இந்த விரைவுசாலை மூலம் காய்கறிகள், பழங்கள் பால் உள்ளிட்டவற்றை குறைந்த நேரத்தில் தலைநகர் தில்லி சந்தைக்கு விவசாயிகள் கொண்டு செல்ல முடியும் என்றார்.
பூர்வாஞ்சல் சாலை திட்டத்தால் கிழக்கு உத்தரப்பிரதேச பகுதிகள் வளர்ச்சியடையும். நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள கிராம மக்களின் அடையாளமே மாறும் என்று பெருமிதத்துடன் கூறினார்.
கடந்த ஆட்சிக்காலங்களில் வாரணாசியில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடக்கப்பட்டன; மக்கள் பாஜக ஆட்சியை தேர்ந்தெடுத்ததும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறத் தொடங்கியது. பாஜக அரசு பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்த திட்டம் உத்தரபிரதேசத்தை உன்னதமான உயரத்திற்கு கொண்டு செல்லும்.
நெடுஞ்சாலை திட்டப் பணிகளை மட்டுமே நாங்கள் மேற்கொள்ளாமல், நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து திட்டங்களிலும் கவனம் செலுத்தி வருகிறோம். வாரணாசியில் - ஹல்தியா இடையிலான கப்பல் போக்குவரத்து, இப்பகுதியில் தொழில் துறை வளர்ச்சியடைய முக்கிய பங்கு வகிக்கும். மேலும், உதான் திட்டத்தின் கீழ் 12 விமான நிலையங்களும் அமைக்கப்பட உள்ளது.
உத்தரபிரதேசத்தில் பாஜக அரசு ஊழைலை ஒழித்து பொருளாதார முன்னேற்றத்தில் மாநிலத்தை வளர்ப்பதில் பாராட்டத்தக்க வகையில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாக பாராட்டு தெரிவித்த மோடி, உத்தரபிரதேசத்தில் வளர்ச்சிக்கான உகந்த சூழலை ஏற்படுத்தும் வகையில் பாஜக அரசு உழைத்து வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.