மோடியின் மனநிலை நோயுற்று இருப்பது தேசத்துக்கு மிகப்பெரிய கவலை: அனந்த் சர்மா தாக்கு

பிரதமராக இருக்கும் ஒருவரின் மனநிலை நோயுற்று இருப்பது தேசத்துக்கு மிகப்பெரிய கவலை தரும் விஷயமாகும் என்று காங்கிரஸ்
மோடியின் மனநிலை நோயுற்று இருப்பது தேசத்துக்கு மிகப்பெரிய கவலை: அனந்த் சர்மா தாக்கு
Updated on
2 min read

புதுதில்லி: முஸ்லிம் ஆண்களுக்கு மட்டும் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கிறதா? என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வியெழுப்பி பேசியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக, பிரதமராக இருக்கும் ஒருவரின் மனநிலை நோயுற்று இருப்பது தேசத்துக்கு மிகப்பெரிய கவலை தரும் விஷயமாகும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அனந்த் சர்மா தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம், ஆஸம்கரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.23,000 கோடி மதிப்பில் 340 கிலோ மீட்டர் தூரத்துக்கு செயல்படுத்தப்படும் பூர்வாஞ்சல் அதிவிரைவு சாலைத் திட்டத்தை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து பேசுகையில், முஸ்லிம் நாடுகளில் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இந்தியாவிலும் தடை விதிக்கப்பட வேண்டும் என்று கோடிக்கணக்கான முஸ்லிம் பெண்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கான கட்சி என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டின் பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்த காலத்தில், இயற்கை வளங்கள் மீது முஸ்லிம்களுக்குதான் முதல் உரிமை இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். ஆதலால், ராகுல் காந்தியின் கருத்து எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. 

காங்கிரஸ் கட்சியிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்கள் கட்சி என்ன, முஸ்லிம் ஆடவர்களுக்கான கட்சியா? முஸ்லிம் பெண்களுக்கு கண்ணியம் மற்றும் உரிமைகள் அளிக்கப்படுகிறதா? முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற விடாமல், எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டுள்ளன என்று பேசி இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’பிரதமர் மோடி தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தின் மாண்பு குறையும் வகையில் பேசி வருகிறார். அவரது பேச்சு பிரதமர் மோடி மிகவும் நோயுற்ற மனநிலையில் இருக்கிறார், குழப்பமான மனநிலையில் இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

பிரதமராக இருக்கும் ஒருவரின் மனநிலை நோயுற்று இருப்பது தேசத்துக்கு மிகப்பெரிய கவலை தரும் விஷயமாகும்.

வரலாற்றையும், உண்மைகளையும் தவறாகச் சித்தரித்து பேசி வரும் மோடி, நாடு முழுமைக்கும் பிரதமர் என்பதை மறந்துவிட்டு, பாஜகவுக்கு மட்டும்தான் பிரதமர் என்ற ரீதியில் பேசி வருகிறார்.

மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், லாலா லஜபதி ராய், மவுலானா ஆசாத் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் தலைவர்களாக இருந்தவர்கள். காங்கிரஸ் தலைவர்களாக யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை அறிந்துகொள்ள மோடி ஒருமுறை வரலாற்றைத் திரும்பப் படிக்க வேண்டும். 

காங்கிரஸ் கட்சி முத்தலாக் மசோதாவுக்கு எதிரானது என்றும் முஸ்லிம்களுக்கு ஆதரவான கட்சி என பிரதமர் மோடி பேசி இருப்பது தகுதியில்லாத வார்த்தையாகும். 

கடந்த 4 ஆண்டுகளாக பொய்களை விற்பனை செய்பவராக இருந்து வரும் மோடி, நாடாளுமன்றத்தைப் புறக்கணித்துவிட்டு, மசோதாக்களைப் புற வழியில் நிறைவேற்றவே முயற்சித்து வருவதுடன், மசோதாக்களை விவாதமின்றி நிறைவேற்றவே விரும்புவதாக ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி மீது சமுதாயத்தில் வெறுப்பும் பயமும் பரவி வருவதாகவும், இதனால் வரவிருக்கும் பொதுத் தேர்தல்களில் சந்திக்கவுள்ள தோல்வியை நினைத்து பிரதமர் பயப்படுவதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவலா தெரிவித்தார். 

மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி பற்றிய தவறான வதந்திகளை பரப்பி வரும் மோடியால், காந்தியின் சித்தாந்தத்தை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com