ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இரவு 8 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்டாவர் பகுதியில் இரவு 7.53 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கிஷ்டாவர் பகுதியில் இருந்து சுமார் 33 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 புள்ளிகளாக பதிவாகியிருந்ததாகவும், பூமிக்கடியில் 43.92 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியது. இதையடுத்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித உயிர்சேதமோ, இடிபாடுகளோ ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.