எஸ்வி சேகரை ஜூன் முதல் வாரம் வரை கைது செய்ய முடியாது!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பதிவிட்ட இழிவான கருத்து விவகாரத்தில் எஸ்வி சேகரை ஜூன் மாதம் முதல் வாரம் வரை கைது செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
எஸ்வி சேகரை ஜூன் முதல் வாரம் வரை கைது செய்ய முடியாது!
Published on
Updated on
1 min read

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்வி சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் கடந்த மாதம் ஒரு இழிவான சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டிருந்தார். இதையடுத்து, பத்திரிகையாளர் மட்டுமின்றி பல தரப்பிடம் இருந்து அந்த பதிவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து, சர்ச்சைக்குரிய அந்த பதிவை நீக்கிய அவர் மன்னிப்பு கோரினார். 

ஆனால், அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அவர் மீது பெண்கள் வன்கொடுமைச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனால், இந்த விவகாரத்தில் முன்ஜாமீன் வழங்குமாறு எஸ்வி சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதே சமயம் எஸ்வி சேகருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று பத்திரிகையாளர்களும் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். 

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் மே 10-ஆம் தேதி எஸ்வி சேகரின் மனுவை தள்ளுபடி செய்து முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. இதனால், அவர் எந்த நேரத்திலும் காவல் துறையினரால் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், காவல் துறையினரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த எஸ்வி சேகர் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உடன் நிகழ்ச்சியில் எல்லாம் பங்கேற்று மேலும் சர்ச்சையை எழுப்பினார். 

இதற்கிடையில், முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீ்ட்டு மனுவையும் அவர் தாக்கல் செய்திருந்தார். 

இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த அந்த மனுவில் எஸ்வி சேகரை ஜூன் மாதம் முதல் வாரம் வரை கைது செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com