சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், துப்பாக்கிசூடு நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் புழல் சிறையில் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெள்ளிக்கிழமை தூத்துகுடிக்குச் சென்றார். அப்போது, போலீஸார் அவரை தூத்துகுடி விமான நிலையத்திலேயே கைது செய்தனர்.
மேலும், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் விழுப்புரம் போலீஸார் வேல்முருகனை கைது செய்து, திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், வேல்முருகன் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் புழல் சிறையில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சிறை அதிகாரிகள் சாப்பிட வலியுறுத்தியும் சாப்பிட மறுத்த வேல்முருகன், தனது கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்று அறிவித்து, இன்று 2-வது நாளாக புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
அவரது கோரிக்கைகளுக்கு ஆதரவாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள், புரட்சிகர இளைஞர்கள் முன்னணி, தமிழ் தேசிய மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என 22 பேரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அவருடைய தொடர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேல்முருகன் இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் இருப்பதால் அவருடைய உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.