பாட்னா: பிகார் மாநிலத்தில் உள்ளூர் பாஜக தலைவர் கங்கோத்ரி பிரசாத் மகனை அடையாளம் தெரியாத ஒரு கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிகார் மாநில உள்ளூர் பாஜக தலைவர் கங்கோத்ரி பிரசாத். இவரது மகன் பியூஷ்குமார் நேற்று இரவு சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதி அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவரை வழிமறித்து கத்தியால் வெட்டி சாய்த்தது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்குபோராடிய பியூஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
ஆளும் கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக பிரமுகரின் மகன் கொலை செய்யப்ப்பட்டுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான ஆட்சியில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதை இந்த கொலை நிரூபிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.