காஷ்மீர் இளைஞர்களை அங்கிருந்து தூக்கி எறிய முடியுமா? - வைகோ ஆவேச பேச்சு

காஷ்மீர் மக்களின் உணர்வுகளோடு விளையாடிவிட்டனர். இன்றைய நாள் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட நாள் என்றும், காஷ்மீர் இளைஞர்களை அங்கிருந்து
காஷ்மீர் இளைஞர்களை அங்கிருந்து தூக்கி எறிய முடியுமா? - வைகோ ஆவேச பேச்சு


புதுதில்லி: ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து காஷ்மீர் மக்களின் உணர்வுகளோடு விளையாடிவிட்டனர். இன்றைய நாள் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட நாள் என்றும், காஷ்மீர் இளைஞர்களை அங்கிருந்து தூக்கி எறிய முடியுமா? என்று மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கடும் ஆவேசமாக பேசினார்.  

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்படும் என்றும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவு 35-ஏ பிரிவை  நீக்க உள்ளதாகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டாக பிரிப்பதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.

மேலும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டால் காஷ்மீரின் எல்லைகளை மத்திய அரசால் மாற்றி அமைக்க முடியும். 

சிறப்பு அந்தஸ்தின் மூலம் காஷ்மீரின் நிரந்தர குடிமக்களை அம்மாநில சட்டப்பேரவை மட்டுமே தீர்மானிக்க முடியும் என தெரிவித்தார். 

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். 

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தததற்கு மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரித்து மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ பேசியது நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதாவது, உங்களுக்கு ஜனநாயகத்தில் கொஞ்சம் விருப்பம் இருந்தால், நான் பேசுவதை கொஞ்சம் கேளுங்கள் என்று தனது பேச்சை தொடங்கிய வைகோ, காஷ்மீரில் ஜனநாயகப் படுகொலையில் ஈடுப்பட்டு உள்ளது பாஜக. சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால் காஷ்மீர் தனது தனித்துவத்தை இழந்துவிட்டது. நேரு அளித்த வாக்குறுதியை மீறி உள்ளது. காஷ்மீருக்கு நாம் கொடுத்த சத்தியத்தை மீறி இருக்கிறோம். அப்பகுதி மக்களை நாம் ஏமாற்றி இருக்கிறோம். இதை பார்க்கும் போது என் இரத்தம் கொதிக்கிறது என கடும் ஆவேசமாக பேசிய வைகோ, இந்த மசோதா நகலை எரித்தாலும் நான் எதிர்க்கமாட்டேன் என பேசினார். 

காஷ்மீரை பாதுகாக்க கார்கில் யுத்தத்தில் தமிழக இளைஞர்கள் ரத்தம் சிந்தி உயிர்நீத்தனர். ஆனால் இன்று தமிழர்கள் உட்பட காஷ்மீர் மக்களின் உணர்வை புண்படுத்திவிட்டது. காஷ்மீருக்கான அனைத்து அதிகாரங்களையும் நீக்கிவிட்டது பாஜக அரசு.

மேலும் காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா கவுன்சில் தலையிடக் கூடும். காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சூட்சமமாக காய் நகர்த்துகிறார். சீனாவும், பாகிஸ்தானும் காஷ்மீரை மிகவும் நெருக்கமாக கவனித்து வருகிறது. நீங்கள் அவர்களுக்கு தேவையான விஷயங்களை எல்லாமே அப்படியே செய்து இருக்கிறீர்கள். இனி வெளிநாட்டு அழுத்தம் அதிகமாக காஷ்மீரில் இருக்கும். நீங்கள் அங்கு என்ன செய்வீர்கள். காஷ்மீர் இளைஞர்களை அங்கிருந்து தூக்கி எறிய முடியுமா?. அவர்கள் வாழ்ந்த பூமியை நாம் அவர்களிடம் இருந்து பறிக்க முயற்சி செய்கிறோம். இது பெரிய ஆபத்தில் முடிய போகிறது. 

காஷ்மீர் பிரச்னையில் பாஜக மட்டும் தவறு செய்யவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் முழு குற்றவாளிதான். ஷேக் அப்துல்லாவை அன்று கைது செய்து தமிழகத்தில் சிறையில் அடைத்தது காங்கிரஸ்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது அரசியலமைப்பை இரண்டாக கிழிக்கும் செயல் என்ற வைகோ, காஷ்மீர் பிரச்னையில் பாஜக மிகப்பெரிய தவறு செய்துள்ளது. காஷ்மீரில் ஒரு பக்கம் பாகிஸ்தான் பிரச்னை செய்கிறது. ஒரு பக்கம் தீவிரவாதிகள் பிரச்னை செய்கிறார்கள். இப்போது நீங்கள் அவர்களின் கைகளில் வசமாக சிக்கி உள்ளனர். மொத்தமாக காஷ்மீரை பிரித்து நீங்கள் பெரிய ஆபத்தில் கை வைத்துள்ளீர்கள்.

கொசாவோ, கிழக்கு திமோர், தென்சூடான் போல காஷ்மீர் உருவாகிவிட கூடாது என்றும், இங்கு நடந்து இருப்பது ஜனநாயக கொலை... கொலை... கொலை மட்டும்தான் என்று மிக ஆவேசமாக பேசிய வைகோ, இந்த மசோதாவை எதிர்க்கிறேன். ஜனநாயகத்தில் நாம் வெட்கப்பட வேண்டிய நாள் இன்று என தனது கருத்தை ஆவேசமாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்தார் வைகோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com