மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று புதன்கிழமை(செப். 11) நொடிக்கு 68 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பிய நிலையில் தொடர் நீர்வரத்துக் காரணமாக அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.
காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக அணைகளின் நீர்வரத்து காரணமாக இன்று புதன்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 68 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.70 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு 94.65 டி.எம்.சி.யாக இருந்தது.
இதையடுத்து, அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 65 ஆயிரம் கன அடியாக உள்ளது.