ஊரடங்கு: எதிர்ப்புக் குரல் இல்லாத ஈரோடு மலை கிராமங்கள்

கரோனா தடுப்பு ஊரடங்கால் வாழ்வாதரம் இழப்பு, தொழில், விவசாயம் பாதிப்பு, வேலையிழப்பு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என
அழகிய தோற்றத்தில் பர்கூர் அருகே கொங்காடை மலை கிராமம்.
அழகிய தோற்றத்தில் பர்கூர் அருகே கொங்காடை மலை கிராமம்.

ஈரோடு: கரோனா தடுப்பு ஊரடங்கால் வாழ்வாதரம் இழப்பு, தொழில், விவசாயம் பாதிப்பு, வேலையிழப்பு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ள நிலையில் ஈரோடு மலை கிராம மக்களிடம் இத்தகைய எந்த எதிர்ப்புக் குரலும் இல்லை.

ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், தாளவாடி,அந்தியூர், கோபி வருவாய் வட்டங்களில் 1,000-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.  கடந்த 25 ஆண்டுகளில் இந்த மலைப்பகுதிதி பெரும் பணக்காரர்களின் ஓய்விடமாக மாறி, பண்ணை வீடுகள் பெருகிவிட்டன. அதே சமயத்தில் போராட்டமான வாழ்க்கை சூழலிலும் வாழ்விடங்களை விட்டு இடம் பெயராத ஏராளமான பூர்வகுடி பழங்குடி மக்கள் இன்னும் இங்கு ஓலைக்குடிசைகளில் வசித்து வருகின்றனர்.

இந்த மலை கிராமங்களில் 15 முதல் 50 வயதுக்குள்பட்ட ஆண்களில் பெரும்பாலனவர்கள் பிழைப்பு தேடி கூலி தொழிலாளர்களாக, நூற்பாலை ஊழியர்களாக சமவெளிப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து விட்டாலும், அவர்களது குடும்பங்கள் இன்னும் மலைகளில் தான் இருக்கிறது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 24 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தொழில்கள் அனைத்தும் முடங்கி வேலையிழந்து சமவெளிப் பகுதியில் வசிக்கும் ஏழை, நடுத்தர மக்கள் பலரும் குழந்தைகளுக்கு பால் வாங்கக்கூட பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.  

சமவெளிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வதார பிரச்னை எதிர்ப்புக் குரலாக ஓங்கி ஒலிக்கிறது.  மேலும் இத்தகைய மக்களுக்கு உணவுத் தேவைக்கு அரசு மட்டுமல்லாது, பல தன்னார்வ அமைப்புகளும் உதவி வருகின்றன.

ஆனால் மலை கிராமங்களில் உள்ள மக்களிடம் இத்தகைய எதிர்ப்புக்குரல், கோரிக்கை முறையீடுகள் ஏதும் இல்லை. சமவெளிப் பகுதிக்கான போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டு, செல்லிடபேசி தொடர்பு மட்டுமே உள்ளது. இருப்பினும் மலை கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்காக அரசை நாடவில்லை.  மலைப்பகுதிகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். கூலி தொழிலாளர்களுக்கு அரசு கொடுத்த ரூ.1,000 பணம், ரேசன் பொருட்கள் வயிற்றுப்பசிக்கு உதவியுள்ளது என்றால் மிகையில்லை.
 
100 நாள் கூலி நிலுவையை வழங்க கோரிக்கை:
ஈரோடு மாவட்ட மலை கிராமங்களில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு 3 மாதம் வரை கூலி நிலுவை ரூ.3,000 முதல் ரூ.10,000 வரை உள்ளது. இந்த பணத்தை அரசு கொடுத்தால் கூலி தொழிலாளர்கள் அத்தியாவசிய தேவைக்கு உதவியாக இருக்கும் என்கிறார் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: மலை கிராம மக்கள் பெரும்பாலனவர்கள், சமவெளிப் பகுதியோடு நெருங்கிய தொடர்பு இல்லாதவர்கள் என்பதால் ஊரடங்கு உத்தரவு அந்த மக்களை பாதிக்கவில்லை. இருப்பினும் உடல்நலம் பாதிக்கப்பட்ட பர்கூர், தாளவாடி, கடம்பூர் மலை கிராமங்களில் உள்ள மக்கள் சமவெளிப் பகுதிகளுக்கு வர இயலாத நிலையில் உள்ளனர். இந்த மக்களுக்கு சிகிச்சை அளிக்க நடமாடும் மருத்துவ சேவை வாகனங்களை அனுப்பிவைக்க வேண்டும்.

பள்ளிகள் விடுமுறை விடப்பட்ட நிலையில் கோலி குண்டு விளையாடும் மலை கிராம பழங்குடியினக் குழந்தைகள்.

மளிகை, காய்கறி போன்றவற்றை நடமாடும் வாகனம் மூலம் மக்களுக்கு நேரடியாக கிடைக்க நடவடிக்கையெடுக்க வேண்டும். நீலகிரி, வால்பாறை போன்ற பகுதிகளில் வேலை நிமித்தம் சென்றுள்ள பர்கூர் மலை கிராம மக்கள், சொந்த ஊர் திரும்ப அரசு உதவ வேண்டும்.  100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும்.  ஏழை கூலி தொழிலாளர்களுக்கு மளிகை பொருட்களை இலவசமாக அளிக்க முன்வரும் தன்னார்வலர்களுக்கு வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.
 
வனத்துறை மூலம் மளிகைப் பொருட்கள் வழங்க ஏற்பாடு:
பர்கூர் மலைப் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு வனத்துறை மேற்பார்வையில் மளிகைப் பொருட்களை வழங்க உள்ளதாக ஈரோடு மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, மலை கிராம மக்கள் உதவி கேட்டு எங்களை அணுகவில்லை. இருப்பினும் கடந்த 15 நாட்களாக வேலை இல்லாத நிலையில் கூலி தொழிலாளர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இதனை கவனத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம், தன்னார்வ அமைப்புகள் உதவியுடன் ஓரிரு நாட்களில் மளிகைப் பொருட்களை மக்களுக்கு நேரடியாக சென்று வழங்க உள்ளோம். மளிகை பொருட்களை பொட்டலமிட்டு தொகுப்பாக வழங்க இருக்கிறோம். இந்த தொகுப்பு வனத்துறை அலுவலர்கள் மேற்பார்வையில் வழங்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com