உலக அளவில் கரோனா நோய்த்தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 3 ஆயிரத்து 289 -ஆக கடந்துள்ளதாகவும், 8 லட்சத்து 36 ஆயிரத்து 970 பேர் குணமடைந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உலக அளவில் நோய்த்தொற்றால் 29,21,201-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 3 ஆயிரத்து 289 -ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8 லட்சத்து 36 ஆயிரத்து 970-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
உலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 9,60,896 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1 லட்சத்து 18 ஆயிரத்து 162 பேர் குணமடைந்துள்ளனர், 54,265 பேர் தொற்றால் பலியாகியுள்ளனர். இதேபோன்று இத்தாலியில் 26,284 பேரும், ஸ்பெயினில் 22,902 பேரும் பலியாகியுள்ளனர்.
மொத்த பலியில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை மட்டும் மூன்றில் இரண்டு பங்காக உள்ளது.
நோய்த்தொற்று பரவத்தொடங்கிய பிறகு ஒரு லட்சம் உயிரிழப்பை எட்ட 3 மாதங்கள் ஆன நிலையில், அடுத்த 15 நாட்களில் உயிரிழ்ந்தோர் எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளது.
இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது ஊழியர்களை நோக்கி சைபர் தாக்குதல்களும், பொதுமக்களை குறிவைத்து மின்னஞ்சல் மோசடிகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளது.
மேலும், "மோசடி மின்னஞ்சல்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ள உலக சுகாதார அமைப்பு, கரோனா நோய்த்தொற்று பரவல் மற்றும் பிற சுகாதார பிரச்னைகள் குறித்த உண்மை தகவல்களைப் பெற நம்பகமான ஆதாரங்களை பார்த்து தெரிந்துகொள்ளுமாறு பரிந்துரைத்துள்ளது,"