தேனியில் கடந்த ஜூலை 15-ம் தேதிக்கு பிறகு வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஜூலை 15-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை வங்கிகளை மூட நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
வங்கிகளில் அரசு தொடர்பான பணப் பரிவர்த்தனைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில், திங்கள்கிழமை மீண்டும் வங்கிகள் திறக்கப்பட்டது.
கடந்த 15 நாள்களுக்குப் பிறகு வங்கிகள் திறக்கப்பட்டதால், அனைத்து வங்கிகள் முன்பும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. வங்கிகள் முன்பு சமூக இடைவெளியின்றி வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
வங்கிகள் மூடப்பட்டிருந்த காலத்தில் நகை கடன் வட்டி செலுத்த காலக்கெடு முடிந்தவர்களுக்கு, அபராத வட்டி விதிக்கப்படுமா என்று வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.