திண்டிவனத்தில் நாட்டுத் துப்பாக்கியால் மானை வேட்டையாடி எடுத்துச் சென்றவர்களை காவலர்கள் கைது செய்தனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, புதிய புறவழிச்சாலையில், திண்டிவனம் போலீசார் வியாழக்கிழமை காலை ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது மரக்காணம் சாலைப் பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர், காவலர்களை கண்டதும் வேகமாகச் செல்ல முற்பட்டனர்.
அவர்களை காவலர்கள் விரட்டிச் சென்றனர். உடனே இருசக்கர வாகனம், துப்பாக்கி மற்றும் சாக்கு மூட்டையை கீழே போட்டுவிட்டு இருவரும் தப்பி ஓடினர்.
சாக்கு மூட்டையை சோதனை செய்ததில், அந்த மூட்டையில் மான் இறைச்சி, இரட்டை கொம்புடன் கூடிய மான் தலை, துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. மான் தலை, நாட்டுத்துப்பாக்கி ஆகியவற்றை கைப்பற்றிய காவலர்கள், அதனை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் மரக்காணம் காப்புக்காடு பகுதியில் மானை வேட்டையாடி, மர்ம நபர்கள் எடுத்துச் சென்றபோது பிடிபட்டது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.