கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோர் இன்று மூணாறு ராஜமலை நிலச்சரிவு நடந்த பகுதிக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்ய உள்ளனர்.
கோழிக்கோடு விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட முதலமைச்சர் மூணாறுக்கு நேரில் செல்லவில்லை என விமர்சிக்கப்பட்டார். இந்த விமர்சனங்களுக்கு பதிலளிதத முதல்வர், மோசமான வானிலை காரணமாக தன்னால் மூணாறு செல்ல முடியவில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோர் நேரில் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்ய இருக்கின்றனர். மூணாறு அனச்சல் பகுதி வரை ஹெலிக்காப்டரில் செல்லும் இவர்கள் அங்கிருந்து மீட்புப்பணி நடக்கும் இடத்திற்கு செல்கின்றனர்.
ராஜமலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து ஏழாவது நாளாக நடந்து கொண்டிருக்கின்றன. நேற்று (புதன்கிழமை) மேலும் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன. மொத்த இறப்பு எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 15 பேர் காணவில்லை.
52 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு மற்றும் மீட்பு குழுக்கள், காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, பஞ்சாயத்துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலர்கள் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.