கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த சேதன் செளகான் உத்தர பிரதேச அரசின் அலட்சியத்தால் தான் இறந்தார் என ஆம் ஆத்மி எம்.பி.சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும் உத்தர பிரதேச மாநில அமைச்சருமான சேதன் செளகான் (72) கடந்த மாதம் கரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் லக்னெளவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதன்பிறகு குருகிராம் பகுதியில் உள்ள வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
மேலும் அவருக்கு சிறுநீரகம் செயலிழந்ததால் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.
இதுகுறித்து எம்.பி.சஞ்சய் சிங் கூறுகையில், சேதன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தரமில்லாத சிகிச்சை அளித்ததால் தான் அவர் மரணமடைந்தார்.
மாநில அரசின் அலட்சியத்தால் இறந்ததால், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அரசாங்க அதிகாரிகள் மீது வழக்குப் பதியக்கோரி லக்னோ காவல் ஆணையர் சுஜீத் பாண்டேவிடம் புகார் அளிக்கப்பட்டதாக சிங் கூறினார்.