அமீரகத்தின் அஜ்மான் நகரில் பேக்கரி கடையில் வேலை பார்த்து வரும் இந்தியர் ஒருவர் ஓரே நாளில் கோடீஸ்வரராகி உள்ளார். அவருக்கு அமீரகத்தின் ஆன்லைன் லாட்டரியில் ரூ.24 கோடி கிடைத்துள்ளது.
ஐக்கிய அமீரகத்தில் லாட்டரி மிகவும் பிரபலமானதாகும். இந்த லாட்டரியில் இந்தியர்கள் அதுவும் குறிப்பாக கேரளம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பரிசுத்தொகை வெல்வது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.
அந்த வகையில், கேரளம் மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் அசைன் முகமது(50). இவர் அமீரகத்தில் அஜ்மான் நகரில் பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நண்பா்களுடன் சேர்ந்து கூட்டாக பல முறை ஆன்லைன் லாட்டரி வாங்கி வந்துள்ளார். அப்போதெல்லாம் இவருக்கு பரிசு விழவில்லை.
இந்த நிலையில் மே 14 ஆம் தேதி நண்பர்களுடன் கூட்டணி சேராமல் தனியாக ஆன்லைனில் 139411 என்ற எண்ணுடைய டிக்கெட்டை வாங்கியுள்ளார். இதையடுத்து இவர் ஒரே நாளில் ரூ 24.6 கோடிக்கு (12 மில்லியன் திர்ஹாம்) அதிபதியாகிவிட்டார்.
இது குறித்து அசைன் முகமது கூறுகையில், 'எனக்கு லாட்டரி பரிசு குறித்து போன் வந்த போது போனில் உங்களுக்கு 12 மில்லியன் திர்ஹாம் பரிசு விழுந்துள்ளது என்றனர். முதலில் நண்பர்கள் என்னை கிண்டல் செய்து விளையாடுகிறார்கள் என்று நினைத்து தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டு, பின்னர், ஆன்லைன் இணையதளத்தில் தேடிய போது நான் வாங்கிய டிக்கெட்டுக்கு பரிசு விழுந்துள்ளதை அறிந்து பின் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனேன். இவ்வளவு பணத்தை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன் என தெரியவில்லை' என அசைன் முகமது அப்பாவியாக கூறினார்.
அசைன் முகமதுவுக்கு ஆஷிபா என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.