திருப்பூர்: தமிழகத்தில் உள்ள கோவில்களைத் திறக்கக்கோரி திருப்பூரில் 400 இடங்களில் இந்து முன்னணி அமைப்பினர் ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை செய்யும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள கோவில்களை வழிபாட்டுக்காகத் திறக்கக்கோரி இந்து முன்னணி அமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதிலும் உள்ள கோவில்களின் முன்பாக ஜூன் 10 ஆம் தேதி ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை செய்யும் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில் முன்பாக நடைபெற்ற போராட்டத்துக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இதில், மாநிலச் செயலாளர் கிஷோர்குமார், கோட்ட செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதே போல், இந்து முன்னணி வடக்கு நகர் மேற்கு பகுதி சார்பில் கொங்கணகிரி முருகன் கோவில், ராயபுரம் ராஜவிநாயகர் கோவில் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் இந்து முன்னணி சார்பில் 400 இடங்களில் ஒற்றைக்காலில் நின்று பிரார்த்தனை செய்யும் போராட்டம் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.