சென்னையில் அதிகபட்சமாக, ராயபுரத்தில் 5 ஆயிரத்து 828 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க.நகரில் பாதிப்பு எண்ணிக்கை 3,244 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கரோனா தொற்றுக்கு பலியாவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் கரோனாவுக்கு இன்று வெள்ளிக்கிழமை மட்டும் 24 பேர் பலியாகியுள்ளனர்.
மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, சென்னையில் இதுவரை 37,070 பேர் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவுக்கு இதுவரை 501 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை 7 பேர் பலியாகியுள்ளனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மூன்று பேரும், தனியார் மருத்துவமனைகளில் ஐந்து பேரும் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 5 ஆயிரத்து 828 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டையில் 4 ஆயிரத்து 743 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனாம்பேட்டை மண்டலத்தில் 4 ஆயிரத்து 504 பேரும், கோடம்பாக்கத்தில் 3 ஆயிரத்து 959 பேரும், அண்ணாநகரில் 3 ஆயிரத்து820 பேரும், திரு.வி.க.நகரில் 3 ஆயிரத்து 160 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடையாறு மண்டலத்தில் 2 ஆயிரத்து 069 பேருக்கும், வளசரவாக்கத்தில் 1,571 பேருக்கும், திருவொற்றியூரில் 1,370 பேருக்கும், அம்பத்தூரில் 1,305 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதவரத்தில் 999 பேரும், ஆலந்தூரில் 781 பேரும், பெருங்குடியில் 729 பேரும், சோழிங்கநல்லூரில் 707 பேரும், மணலியில் 525 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.