கோவை: கோவை பூ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாததால், அப்பகுதிக்கு சீல் வைக்கப்பட்டு, தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.
கோவை பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள், பொதுமுடக்கத்திற்கு பிறகு கடந்த மே 10- ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது.
இந்நிலையில், பூமார்க்கெட்டில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு மேல் கூடுவதால் அங்கு சமூக இடைவெளி முறையாகப் பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து, கோவையில் தற்போது கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால், பூ மார்க்கெட்டுக்கு சீல் வைக்க மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத் உத்தரவிட்டார். அதன்படி, மேற்கு மண்டல உதவி ஆணையர் செந்தில் அரசன் தலைமையில் நிர்வாகப் பொறியாளர் சரவணக்குமார், உதவிப் பொறியாளர் கமலக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், பூ மார்க்கெட் வளாகத்திற்கு சீல் வைத்தனர். அங்குள்ள 144 கடைகள் அடைக்கப்பட்டன.
மேலும், அப்பகுதியில் யாரும் நுழையாத விதமாக 400 மீட்டர் தொலைவுக்கு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் டவுன்ஹால் லங்கா கார்னர் பகுதியில் இருந்த சில கடைகளையும் அடைக்க மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.