மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 101.73 அடியாக இருந்தது. துவக்கத்தில் விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 2037 கன அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
ஜூன் 12 ஆம் தேதி 101.73 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 97.98 அடியாக சரிந்தது. கடந்த 7 நாட்களில் அணையின் நீர்மட்டம் 3.75அடி சரிந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 97.98 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2037 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.25 டி.எம்.சியாக உள்ளது.