ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

அமெரிக்கா, இஸ்ரேல் தவிர மற்ற அனைவருக்கும் ஹோா்முஸ் நீரிணை திறந்திருக்கும்: அப்பாஸ் அராக்சி

உலகளாவிய கப்பல் போக்குவரத்துக்காக ஹோா்முஸ் நீரிணை திறந்தே இருப்பதாகவும், ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கப்பல்கள் அந்த வழியாக செல்ல அனுமதிக்கப்படாது என்று அப்பாஸ் அராக்சி எச்சரித்தது குறித்து...

News image
அப்பாஸ் அராக்சி- கோப்புப்படம்
Updated On :15 மார்ச் 2026, 8:01 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதலைத் தொடங்கியது முதல், ஈரானுக்கும், ஓமன் நாட்டுக்கும் இடையே உள்ள குறுகிய ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் தடைபட்டு நின்றன. இதனால் கச்சா எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்து முடங்கி எரிபொருள் தட்​டுப்​பாடு நில​வு​கிறது.

இந்திய தேசியக் கொடி பொருத்திய 28 சரக்கு கப்பல்களில் 24 கப்பல்கள் அந்த நீரிணையின் மேற்குப் பகுதியிலும், 4 கப்பல்கள் கிழக்குப் பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதனிடையே, நீரிணையின் கிழக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 4 இந்திய கப்பல்களில் ஒன்று, நீரிணையை வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக கடந்து சென்றது. இந்த கப்பல் ஆப்பிரிக்க நாட்டுக்கு எரிபொருளை ஏற்றிச் சென்றது.

இந்தச் சூழலில் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள பிற இந்திய கப்பல்களில் ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய இரு எல்பிஜி கப்பல்கள் சனிக்கிழமை காலை ஹோா்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்தன. இவற்றில் 92,700 டன் எல்பிஜியுடன் ஷிவாலிக் கப்பல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை மாா்ச் 16-ஆம் தேதியும், நந்தா தேவி கப்பல் குஜராத்தின் காண்ட்லா துறைமுகத்தை மாா்ச் 17-ஆம் தேதியும் வந்தடையவுள்ளன.

இதுதவிர மேற்குப் பகுதியில் 6 எல்பிஜி கப்பல்கள், ஒரு இயற்கை எரிவாயு (எல்என்ஜி) கப்பல், ஒரு ரசாயன கப்பல், 4 கச்சா எண்ணெய்க் கப்பல்கள், 3 கன்டெய்னா் கப்பல்கள், 2 சரக்குக் கப்பல்கள், பராமரிப்பில் 3 கப்பல்கள் உள்பட 22 கப்பல்கள் சிக்கியுள்ளன. இதில் 611 மாலுமிகள் உள்ளனா். இத்துடன் ஹோா்முஸ் நீரிணையின் கிழக்குப் பகுதியில் 76 மாலுமிகளுடன் சிக்கியுள்ள 3 கப்பல்களையும் மீட்கும் நடவடிக்கையை இந்தியா அரசு மேற்கொண்டு வருகிறது.

உலக அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணை, ஈரான் தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தால் மூடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் பெரும் பகுதி இந்த நீரிணை வழியாக வருகிறது. இப்போது வரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் தேவைக்கு ஏற்ப எரிவாயு விநியோகம் செய்வதில் பிரச்னை எழுந்துள்ளது.

உலகளாவிய கப்பல் போக்குவரத்துக்கு ஹோா்முஸ் நீரிணை திறந்தே உள்ளது

இந்த நிலையில், ஹோா்முஸ் நீரிணை உலகளாவிய கப்பல் போக்குவரத்துக்கு திறந்தே இருப்பதாகவும், ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கப்பல்கள் முக்கியமான கடல் பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்படாது என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.

உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கான ஒரு முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணை - மேற்கு ஆசிய பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் சர்வதேச போக்குவரத்திற்கு மூடப்படவில்லை. இருப்பினும், "அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கப்பல்களுக்கு மட்டுமே இந்த பாதையை மூடப்பட்டுள்ளது" என்று அராக்சி செய்தியாளர்களுடனான சந்திப்பில் ஒன்றில் கூறியுள்ளார்.

மேற்கு ஆசிய பகுதியில் அதிகரித்து வரும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் பாதுகாப்பு காரணமாக சில கப்பல் நிறுவனங்கள் ஹோா்முஸ் நீரிணை தவிர்த்து வருவதாகக் கூறப்பட்டாலும், மற்ற கப்பல்கள் தொடர்ந்து இந்த பாதையைப் பயன்படுத்தி வருகின்றன என்று அவர் கூறினார். அத்தகைய கவலைகள் ஈரானின் நடவடிக்கைகளுடன் சம்மந்தமில்லாதவை. "ஹோர்முஸ் நீரிணை வழியாக இன்னும் பல டேங்கர் கப்பல்களும், கப்பல்களும் சென்று கொண்டுதான் இருக்கின்றன" என்று அவர் கூறினார்.

மேலும், ஈரான் குறித்த ஊகங்கங்களுக்கு பதிலளித்த அராக்சி, சமீபத்தில் ஈரானின் உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மொஜ்தபா காமேனி காயமடைந்ததாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளரின் கருத்தை நிராகரித்துடன், நாட்டின் உச்ச தலைவர் நலமாகவும் ஆற்றலோடு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், "உச்ச தலைவருடன் எந்தப் பிரச்னையும் இல்லை." தலைவர் சமீபத்தில் ஒரு செய்தியை அனுப்பியதாகவும், ஈரானின் அரசியலமைப்பின் கீழ் தனது பொறுப்புகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருவதாகவும் அவர் கூறினார்.

ஈரானின் அரசியல் அமைப்பு மீள்தன்மை கொண்டது என்றும், எந்தவொரு தனிநபரையும் சார்ந்து இல்லை. "எல்லாம் கட்டுப்பாட்டில் உள்ளது" என்று அவர் கூறினார்.

ஜெனீவாவில் அமெரிக்க தூதர்களுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளின் போது தான் கூறியதாகக் கூறப்படும் கருத்துகள் குறித்த குற்றச்சாட்டுகளை ஈரானிய தூதர் நிராகரித்தார். பல அணு குண்டுகள் தயாரிப்புகான யுரேனியத்தை வைத்திருப்பதாக வரும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அராச்சி, நாட்டின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு குறித்த கருத்துகள் அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக கூறினார்.

ஈரான் தற்போது 60 சதவீத செறிவூட்டப்பட்ட சுமார் 440 கிலோகிராம் யுரேனியத்தை வைத்திருப்பதாகவும், இது அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யதற்கு கோட்பாட்டளவில் மேலும் செறிவூட்டப்படலாம் என்றும் அவர் விளக்கினார்.

பேச்சுவார்த்தைகளின் போது இந்தப் பிரச்னையை எழுப்பியதன் நோக்கம், ராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் ஈரான் விவாதிக்க விரும்பும் சலுகைகளின் அளவை நிரூபிப்பதாகும்.

சமீபத்தில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு ஹோா்முஸ் நீரிணை செல்வதை உறுதி செய்வதற்காக வாஷிங்டன் மற்றும் பல நட்பு நாடுகள் அந்தப் பகுதியில் போர்க்கப்பல்களை அனுப்ப முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

ட்ரூத் சோஷியலில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், ஈரான் ஹோா்முஸ் நீரிணையை மூட முயற்சித்ததாகவும், இதனால் பாதிக்கப்பட்ட பிற நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட்டு வருவதாக கூறிய டிரம்ப், சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐக்கிய அரபு உள்ளிட்ட நாடுகள் இந்தப் பாதையை நம்பியுள்ளன என்றும், இந்தப் பாதையை திறந்த மற்றும் பாதுகாப்பாக வைத்திருக்கும் முயற்சிகளில் அவர்கள் இணையலாம் என்றும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

ஹோா்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான கடல்சார் வழித்தடங்களில் ஒன்றாகும், இது வளைகுடா உற்பத்தியாளர்களிடமிருந்து உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் பங்கு வைக்கிறது. அங்கு ஏற்படும் எந்தவொரு இடையூறுகளும் உலகளாவிய எரிசக்தி சந்தைகள் மற்றும் கப்பல் போக்குவரத்தை கணிசமாக பாதிக்கும்.

summary

Iranian Foreign Minister Abbas Araghchi has said that the strategic Strait of Hormuz remains open to global shipping, but warned that vessels from the United States and Israel would not be allowed to pass through the crucial maritime route

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.