ஓமலூர் அருகே 6000 கிலோ ரேஷன் அரிசி, 2 லாரிகள் பறிமுதல்: கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம்
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி அருகே 6 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி வைக்கோல் லாரிக்கு இடையே வைத்து கடத்திச் சென்ற போது தீவட்டிப்பட்டி காவலர்கள் சுற்றி வளைத்து பிடித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்களிடம் ஒப்படைத்தனர். தப்பிய ஓடிய லாரி ஓட்டுநர்கள், கடத்தல்காரர்களை காவர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்
ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டி காத்தான்கொட்டாய் பகுதியில் வைக்கோல் லாரியிலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை பொலிரோ பிக் அப் வாகனத்தில் மாற்றி கடத்தல் நடைபெறுவதாக தீவட்டிப்பட்டி காவலருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இவர்களை பிடிக்க தீவட்டிப்பட்டி காவலர்கள் விரைந்து வந்தனர். அப்போது வைக்கோல் லாரியிலிருந்து அரிசி மூட்டைகளை பிக்கப் லாரிக்கு மாற்றிக்கொண்டு இருந்ததை கண்டுபிடித்தனர். காவலர்களை பார்த்தவுடன் அங்கிருந்த ஓட்டுநர் மற்றும் கடத்தல்காரர்கள் தப்பி ஓடினர். இதைத்தொடர்ந்து காவலர்கள் இரண்டு லாரிகளை பறிமுதல் செய்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவலருக்கு தகவல் கொடுத்தனர். உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் கோபி மற்றும் காவலர்கள் விரைந்து வந்து பார்த்தபோது அதில் 6000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து இரண்டு லாரிகள் மற்றும் அரிசியை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
கடத்தப்பட்ட லாரிகளில் பல்வேறு மாநிலங்களில் நம்பர் பிளேட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் செல்லும் போது அந்தந்த மாநில நம்பர் பிளேட்டுகளை மாற்றி கடத்தி விற்பனை செய்வது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மதிப்பு சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனவும், இரண்டு லாரிகளின் மதிப்பு சுமார் 10 லட்சம் இருக்கும் எனவும் தெரிவித்தனர். மேலும் ரேஷன் அரிசியை கடத்தி வந்தவர்கள் யார் ஓட்டுநர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்தல் நடந்த சம்பவம் அந்த பகுதியில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.