தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

135 ஊராட்சிகளில் ரூ.9.92 கோடி கரோனா சிறப்பு நிதியுதவி திட்டம்: திருச்சியில் அமைச்சர்கள் தொடங்கி வைப்பு

ருச்சி மாவட்டத்தில் 5 ஒன்றியங்களுக்குள்பட்ட 135 ஊராட்சிகளுக்கு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் ரூ.9.92 கோடி கரோனா சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்ம

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:49 pm

DIN

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 5 ஒன்றியங்களுக்குள்பட்ட 135 ஊராட்சிகளுக்கு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் ரூ.9.92 கோடி கரோனா சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் சனிக்கிழமை தொடக்கி வைத்தனர்.

அரசு உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம்,  ஊரக தொழில்களை மேம்படுத்தல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழி வகுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பணிகள் செயல்படுத்தப்படும். 

இந்தத் திட்டமானது முசிறி, அந்தநல்லூர், மணப்பாறை, மணிகண்டம், துறையூர் ஆகிய 5 ஒன்றியங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதன் தொடக்க விழா, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 

விழாவில், பயனாளிகளுக்கு நிதியுதவிகளை வழங்கி சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் பேசியது:
திருச்சி மாவட்டத்தில் 5 ஒன்றியங்களுக்குள்பட்ட 135 ஊராட்சிகளில் மகளிர் குழுக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டு பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊரகத் தொழில்களை மேம்படுத்த நிதியுவி அளிக்கப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோரால் மேற்கொள்ளப்படும் வாழ்வாதாரத் தொழிலை மேம்படுத்துவதற்காகவும், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்புகள், பிற பகுதிகளுக்கு புலம் பெயா;ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு புதிதாக தொழில் தொடங்கவும் நிதியுதவி அளிக்கப்படும். 

இத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் ரூ.300 கோடியில் சிறப்பு நிதி தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், திருச்சி மாவட்டத்துக்கு  ரூ.9.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில், 1080 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் என்ற அடிப்படையில் நீண்ட கால தனிநபர் தொழில்கடனாக ரூ.5.40 கோடி வழங்கப்படுகிறது.

 54 உழவர் உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள 1080 பேருக்கு ஒருமுறை மூலதன மானியமாக குழு ஒன்றுக்கு ரூ.1.50லட்சம் என்ற அடிப்படையில் ரூ.81 லட்சம் வழங்கப்படும். 5 பயனாளிகள் அடங்கிய 10 தொழில் குழுக்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.15 லட்சம் ஒருமுறை மூலதன மானியமாக வழங்கப்படும். புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பி வந்த 167 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க  கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தலா ரூ.1 லட்சமும், ரூ.1.67 கோடி நீண்டகால கடனாக வழங்கப்படும். உழவர் உற்பத்தியாளர்  கூட்டமைப்பு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என 2 அமைப்புகளில் ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் ரூ.20 லட்சம் மூலதன மானியம் வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள்,கணவரை இழந்தோர், திருநங்ககைள், ஆதரவற்றோர் உள்ளிட்ட நலிவுற்றோரின் தொழில் மேம்பாட்டிற்காக 1080 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் என்ற அடிப்படையில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலமாக ரூ.1.68 கோடி நீண்ட கால கடனாக வழங்கப்படும். இந்த நிதித் தொகுப்பை பெற தகுதியான முசிறி, அந்தநல்லூர், மணப்பாறை, மணிகண்டம், துறையூர் வட்டாரத்தைச் சேர்ந்த மகளிர் குழுக்கள், உழவர் குழுக்கள் உள்ளிட்டோர் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்றார்.

இந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், ஊரகப் புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ஆரோன் ஜோஸ்வரா ரூஸ்வெல்ட்,  செயல் அலுவலர் க. திருமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.