
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன் ஆகியோர் சிறை விதிகளின்படி சந்தித்துப் பேச அனுமதி மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா தாக்கல் செய்த மனுவில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு எனது மகள் நளினி, மருமகன் முருகன் ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கணவன் மனைவியான எனது மகளும், மருமகனும் சிறை விதிகளின்படி 15 நாள்களுக்கு ஒரு முறை சந்தித்துப் பேச அனுமதி வழங்க வேண்டும்.
ஆனால் கடந்த 3 மாதங்களாக இருவரும் சந்தித்துப் பேச நளினி மற்றும் முருகனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் முருகன் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். எனவே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள முருகனுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
மேலும் முருகனைச் சந்திக்க நளினிக்கு அனுமதி வழங்க வேண்டும் என சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், 7 பேரை விடுதலை செய்ய சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றிய தமிழக அரசு சிறைவிதிகளின்படி நளினி, முருகன் சந்தித்து பேச அனுமதி மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினர்.
மேலும் இதுதொடர்பாக ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.