திருச்சிக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வருகை தருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக அரசு அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்கள், புகைப்படகலைஞர்கள், வீடியோ ஒளிப்பதிவாளர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசதோனை மேற்கொள்ளப்படுகிறது.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு காவிரி, டெல்டா பகுதிகளில் சாகுபடி தொடங்கியுள்ளது. இந்த நிலையில், காவிரி, டெல்டா பகுதிகளை பார்வையிடவும், குடிமராத்து பணிகளை ஆய்வு செய்யவும் மற்றும் விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் திருச்சிக்கு வரும் வெள்ளிக்கிழமை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வருகை தருவதாக உள்ளது.
இதையடுத்து, முதல்வருடன் நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது. இதற்காக, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் தொடங்கி முதல்வர் விழாவில் பங்கேற்கும் அனைத்து அலுவலர்கள், உதவியாளர்கள், ஓட்டுநர்கள் என அனைத்து தரப்பினருக்கும் செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டன.
அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் மாதிரிகளை உரிய பாதுகாப்புடன் சேகரித்தனர். இதேபோல, பத்திரிகையாளர்களுக்கும் புதன்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.