தஞ்சாவூரில் எல்ஐசி முகவர் வீட்டில் பூட்டை உடைத்து நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் வடக்கு வாசல் ரோகினி தெருவைச் சேர்ந்தவர் வைரவன் (61). எல்ஐசி முகவர். இவர் புதுக்கோட்டை மாவட்டம், முதலியப்பட்டியில் உள்ள உறவினரைப் பார்ப்பதற்காக ஜூன் 12-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றார். இவரது வீட்டின் பின்பக்கக் கதவு உடைந்து கிடப்பதாக வைரவனிடம் வீட்டுப் பணிப்பெண் திங்கள்கிழமை தகவல் அளித்தார்.
வீட்டுக்குத் திரும்பிய இவர் பின்பக்கக் கதவை மர்ம நபர்கள் உடைக்க முயற்சி செய்திருப்பதையும், முன் பக்கக் கதவில் இருந்த பூட்டை உடைத்திருப்பதையும் கண்டார். மேலும் பீரோவில் இருந்த 2 பவுன் நகைகள், ரூ. 20,000 திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினர் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.