வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், பாஜக வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, சேலம் கிழக்கு மாவட்ட பாஜகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் பாஜகவினர் நடத்தப்போவதாக அறிவித்துள்ள வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் க.மணிகண்டன் தலைமையில், வெள்ளிக்கிழமை வாழப்பாடியில் திரண்ட பாஜகவினர் பேருந்து நிலையம் அருகே பிரதான சாலையை மறித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் மாவட்டத் தலைவர் மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் பொன்.பழனிசாமி, சண்முகநாதன், ஆடிட்டர் குப்பமுத்து, ஹரிஜெயசித்ரா, அயோத்தி ராமச்சந்திரன், வாழை.வெங்கட், பழனிவேல், சிவக்குமார், ஜெயக்குமார், சுப்பராயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் வேல்மணி, காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.