போதைப் பொருளான கஞ்சா பயன்பாட்டுக்கு ஆதரவாக அமெரிக்க மக்கள் இருப்பதை அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
அமெரிக்காவின் அரிசோனா, நியூ ஜெர்சி, மோன்டனா மற்றும் தெற்கு டகோட்டா ஆகிய 4 மாகாணங்களில் கஞ்சா பயன்பாட்டுக்கு ஆதரவளிக்கும் விதமாகவே தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ளனர்.
அரிசோனா, நியூ ஜெர்சி, மோன்டனா, தெற்கு டகோட்டா ஆகிய மாகாணங்கள் தற்போது கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக்கும் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன.
இந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் 15 மாகாணங்களில் கஞ்சா பயன்பாட்டை அனுமதிக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஏற்கெனவே, 36 மாகாணங்களில் மருத்துவத்திற்காக கஞ்சா பயன்படுத்துவதை அனுமதிக்கும் சட்டம் நடைமுறையில் இருக்கிறது.
தெற்கு டகோட்டா மற்றும் மொன்டானாவில், குடியரசுக் கட்சியினர் 16 சதவீத அதிக வாக்கு பெற்று வெற்றி பெற இந்தச் சட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
வாக்கெடுப்பு ஒன்றில் சுமார் 68 சதவீத அமெரிக்கர்கள் கஞ்சா பயன்பாட்டை ஆதரித்துள்ளனர். 2003 ஆம் ஆண்டு நிலைமையைவிட இது இரண்டு மடங்கு அதிகமாகும்.
கரோனா தொற்றால் பலர் வேலை இழந்துள்ள நிலையில், புதிய சட்டங்கள் மூலம் தொழில் வாய்ப்புகள் பெருகும் என்றும் அரசுக்கு அதிகளவில் வரிகள் கிடைக்கும் என்றும் கஞ்சா ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர்.