இந்தியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 109 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புப் படை வெளியிட்ட செய்தியில்,
நவீன மீட்பு உபகரணங்களுடன் என்.டி.ஆர்.எஃப் இன் 109 குழுக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் பிற அவசர கால மீட்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர். அவற்றில் 24 குழுக்கள் முழுமையான அதிநவீன கருவிகளுடன் தெலங்கானா, கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹைதராபாத் மற்றும் சுற்றியுள்ள நகரங்களில் நான்கு என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இன்று, என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் ஹைதராபாத் மற்றும் ரங்கரெட்டி மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பியுள்ளனர். அப்பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என தெரிவித்தனர்.