அருணாசலத்தில் 11 அமைச்சர்களுக்கு ஆலோசகர்களாக 22 எம்.எல்.ஏ.க்கள் நியமனம்
அருணாசல பிரதேசத்தில் 11 அமைச்சர்களின் ஆலோசகர்களாக 3 பெண்கள் உள்பட 22 சட்டமன்ற உறுப்பினர்களை நியமித்து வியாழக்கிழமை அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் பெமா காண்டு வெளியிட்ட அறிக்கையில்,
11 அமைச்சர்களின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ள 22 எம்.எல்.ஏ.க்களுக்கு தனியாக எந்த ஒரு ஊதியம் அல்லது சலுகைகள் வழங்கப்படவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடையே பொறுப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், குழுப்பணியின் உணர்வை நிலைநிறுத்துவதற்கும் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளது.
இதனால் அரசாங்கத்தில் பணி கலாச்சாரம் மேம்படும் மற்றும் மேற்கொள்ளப்படும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு சரியான நேரத்தில் முடிக்க உதவும்.
முதல்வர் வெளியிட்ட ஒரு தனி அறிவிப்பில், வரி மற்றும் கலால், மாநில லாட்டரிகள், பொருளாதார மற்றும் புள்ளிவிவரங்கள் தொடர்பான கூடுதல் துறைகளை துணை முதல்வர் செளனா மெயினுக்கு ஒதுக்கியுள்ளார். மேலும், முதல்வர் தன்னிடம் வைத்திருந்த பல இலாகாக்களையும் பல அமைச்சர்களுக்கு ஒதுக்கியுள்ளார்.
அதிகாரம் மற்றும் ஆளுகையை பரவலாக்குவதற்காகவே இந்த மாற்றங்களை செய்துள்ளதாகவும், இது வளர்ச்சி பாதைக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.