திருச்சி: திருச்சி மாநகரில் காணாமல் போன 130 செல்லிடப் பேசிகளை, காவல்துறையினர் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமை வகித்து, மீட்கப்பட்ட செல்லிடப் பேசிகளை உரியவர்களிடம் வழங்கினார். சுமார் ரூ. 16.31 லட்சம் மதிப்பிலான 130 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், செல்லிடப்பேசிகள் காணாமல் போனால் உடனடியாக காவல் துறையிடம் புகார் தெரிவியுங்கள். தாமதமாக புகார் அளித்தால் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படும் என கூறினார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த செல்போன்கள், சைபர் கிரைம் காவல்துறை முயற்சியால் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர்கள் பவன்குமார், வேதரத்தினம், கூடுதல் துணை ஆணையர் ரமேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.