பவானி: நலவாரிய உதவி பெறாத கைத்தறி ஜமக்காள கூலி நெசவாளர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கக் கோரி பவானியில் கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பவானி வட்டார கைத்தறி ஜமக்காளம், பெட்சீட் நெசவாளர் மற்றும் சாய தொழிலாளர் சங்கம் - ஏஐடியுசி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் பி.எம்.கந்தசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜம்மாள் முன்னிலை வகித்தார்.
கோரிக்கைகளை விளக்கி சங்க செயலாளர் வ.சித்தையன், துணைச் செயலாளர் பி.ஆர்.அல்லிமுத்து ஆகியோர் பேசினர். நலவாரிய உதவி பெறாத கைத்தறி ஜமக்காளம் கூலி நெசவாளர்கள் அனைவருக்கும் கைத்தறித் துறை மூலம் வழங்கப்படும் நிவாரண உதவி வழங்க வேண்டும். கரோனா முழு முடக்கத்தால் பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு நிவாரண நிதியை மாதம் ரூ.7,500 என உயர்த்தி வழங்க வேண்டும்.
கூட்டுறவு சங்கங்கள் நெசவாளர்களுக்கு நூல் வழங்கி வேலையின்மையை போக்க வேண்டும். 1994-ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட கைத்தறி நெசவாளர் அடிப்படை ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும். கைத்தறி துணிகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்கவேண்டும்.
சட்டவிரோத விசைத்தறி ஜமக்காள உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்ய வேண்டும். அனைத்து தரப்பு மக்களையும் பெரிதும் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.