நாளை(பிப்.18) நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் கடந்த நவம்பர் 26 முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் விவசாய பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற பல சுற்று பேச்சுவார்த்தைகளில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதனால், விவசாயிகளின் போராட்டம் நவம்பர் தொடங்கி தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், நாளை நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்திற்கு விவசாய சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள செய்தியில்,
பிப்ரவரி 18ஆம் தேதி மதியம் 12 மணிமுதல் மாலை 4 மணிவரை நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் அமைதியான முறையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது. நடுவழியில் பயணிகளின் சிரமத்தை தவிர்க்க, அவர்களுக்கான உணவுகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.