தம்மம்பட்டியில் ஆண்டிற்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூத்தது
தம்மம்பட்டியில் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூக்கள் பூத்தது.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி உடையார்பாளையத்தில் வசிப்பவர் ஜெயராமன். ஓய்வுபெற்ற சர்வேயர். இவரது மனைவி குழந்தை மேரி. இவர்களது பிரம்மகமலம் பூச்செடியை இருவரும் சேர்ந்து வளர்த்து வந்தனர். இவர்களது வீட்டில் பூச்செடியில், பிரம்ம கமலம் பூ தற்போது பூத்துகுலுங்குகிறது. இது ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அரிய வகை பூ. இதற்கு நிஷா கந்தி என்ற பெயரும் உண்டு. இதை காண்பது மிகவும் அரிது மட்டுமல்ல நல்லது என்பது ஐதீகம்.
இந்தப் பூ இரவுதோறும் எட்டு எட்டரை அளவில் விரிய ஆரம்பித்து 11 மணி அளவில் முழுவதும் மலர்ந்துவிடும்.அவ்வாறு மலர்ந்த பிரம்மகமலப்பூ, தொடர்ந்து இரண்டரை மணிநேரங்கள் மலர்ந்து, விரிந்து காணப்படும். அதன்பின்னர், இரண்டு இரண்டரை மணி நேரம் கழித்து மலர் குவிந்து விடும் பின் வாடிவிடும்.
இதுகுறித்து ஜெயராமன்-குழந்தைமேரி தம்பதி கூறியதாவது, இது மலரும்போது நாம் நினைப்பதை வேண்டிக்கொண்டால், நடக்கும் என்பது வட நாட்டு நம்பிக்கை. இது ஹிமாலயன் பிரதேசங்களில் வளரக் கூடிய பூ. தற்பொழுது குளிர் பிரதேசங்களிலும் இது வளர்க்கப்படுகிறது. நாமும் நமது வீட்டில் வளர்க்கலாம் என்று வளர்த்தோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.