
சங்க இலக்கியங்களுக்கு உயிர்கொடுத்தவர் தமிழ்தாத்தா டாக்டர் உ.வே.சா என புகழ்ந்தார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன். வலங்கைமான் வட்டம் உத்தமதானபுரத்தில் அமைந்துள்ள தமிழ்த்தாத்தா டாக்டர்.உ.வே.சா அவர்களின் நினைவு இல்லத்தில் 168 வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் சனிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: உலகத்தில் உள்ள பழமையான மொழிகளில் ஹீப்ரு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளை கடந்து இன்றும் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் தமிழ் மொழி மட்டும் தான் எக்காலத்திலும் இலக்கியமாகவும், மக்கள் பயன்பாட்டு மொழியாகவும் தொடர்ந்து விளங்கி வருகின்றது.
தமிழ்த்தாத்தா உ.வே.சா ஒலைச்சுவடி வடிவில் இருந்த இலக்கியங்களை இன்றும் அனைவரும் படிக்கும் வகையில் புத்தக வடிவில் பதிப்பித்து சிறப்பான பணியை தமிழுக்காக ஆற்றி இருக்கின்றார்கள். தமிழ்த்தாத்தா உ.வே.சா. ஒலைச்சுவடிகளில் இருந்து சங்க இலக்கியங்களை அச்சில் ஏற்றி சங்க இலக்கியங்களுக்கு உயிர்கொடுத்தவர். ஒலைச்சுவடிகளை ஊர் ஊராக சென்று சேகரித்தவர். தீயில் எரிந்ததையும், தண்ணீரில் ஆற்று நீரில் சென்றதையும் எடுத்துப்பாதுகாத்து, ஒலை சுவடிகளில் இருந்த எழுத்துக்களை முறைப்படுத்தி இலக்கியங்களை முழமையாக்கி கொடுத்து, ஆசிரியர், மாணவர் உறவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் உ.வே.சா ஆவார்.
இளைய தலைமுறையாகிய நீங்கள் வாழ்வில் பிறந்தோம் இருந்தோம் என்று இல்லாமல் பொதுத்தொண்டில் சிறந்து விளங்கவேண்டும். அதன் மூலம் தங்கள் வீட்டிற்கும், நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் நல்லபெயரையும் பெறவேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், திருவாரூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், வட்டாட்சியர் சந்தானம், வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.